உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு 2,591 கன அடி நீர் வரத்து

Published On 2022-11-22 09:35 GMT   |   Update On 2022-11-22 09:35 GMT
  • பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
  • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 12 நாட்களாகவே பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 591 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

Tags:    

Similar News