ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு
- தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
- வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
சென்னை :
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சட்டங்கள் பல இருந்தாலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
அவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை. எனவே, இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே என் மனுவை பரிசீலிக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்து. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டனர்.