உள்ளூர் செய்திகள்
சென்னை விமானத்தில் எந்திர கோளாறு: 3½ மணிநேரம் பயணிகள் தவிப்பு
- விமானம் புறப்படுவதற்கு முன் விமானி, விமானத்தின் எந்திரங்களை சரிபார்த்தபோது கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
- எந்திர கோளாறை சரிபார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் விமானம் இரவு புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து, துபாய் செல்லும் பயணிகள் விமானம் நேற்று இரவு 7 மணிக்கு, புறப்பட தயாராக இருந்தது. அதில் 172 பயணிகள் செல்ல தயாராக இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன் விமானி, விமானத்தின் எந்திரங்களை சரிபார்த்தபோது கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து எந்திர கோளாறை சரிபார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் விமானம் இரவு புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. புறப்படும் நேரம் இரவு 8 மணி, 9 மணி என மாறிமாறி அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் இரவு 10.30 மணிக்கு விமானத்தின் எந்திரங்கள் சரி செய்யப்பட்டு 3½ மணி நேரம் தாமதமாக துபாய்க்கு புறப்பட்டு சென்றது.