நங்கநல்லூரில் ஏ.சி.யில் தீப்பிடித்ததில் முதியவர் உயிரிழப்பு
- சுப்பிரமணி இருந்த அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வந்தது.
- ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:
நங்கநல்லூர், 19-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்(வயது 84). இவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. இவருடைய மனைவி அன்னபூரணி. இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சுப்பிரமணி இருந்த வீட்டின் அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அறை முழுவதும் பரவி கரும்புகை ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னபூரணி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் கிண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் எரிந்த நிலையில் சுப்பிரமணியம் இறந்து கிடந்தார். அவர் தீயில் சிக்கி வெளியேற முடியாமல் இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை பழவந்தாங்கல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.