உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மழையின்மை காரணமாக மிளகு விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரிப்பு

Published On 2023-08-30 04:22 GMT   |   Update On 2023-08-30 04:22 GMT
  • தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.
  • போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுவதால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடியில் குறுமிளகு விளைச்சல் குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.

போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான குரங்கணி, டாப் ஸ்டேஷன், போடி மெட்டு மற்றும் கேரள பகுதிகளான வண்டல் மேடு, பியல்ராவ், பூப்பாறை, ராஜா காடு, கஜானா பாறை போன்ற பகுதிகளில் மிளகு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.

ஏலத் தோட்டத்தில் உள்ள மரங்களில் துணைப் பயிராக வளர்க்கப்படும் குறுமிளகு மத்திய அரசின் நறுமண உற்பத்தி பொருள்கள் அமைப்பு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஏலக்காய் போன்று இதுவும் பணப்பயிர்களின் ஒன்றாக கருதப்படுவதாலும் முக்கிய ஏற்றுமதி பயிராக திகழ்வதாலும் மத்திய அரசு நறுமண ஏற்றுமதி பொருள்களின் விதிமுறைகள் இதற்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது

கடந்த 20 நாட்களுக்கு முன்பு 1 கிலோ ரூ. 430 முதல் முதல் ரூ.450 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ. 150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்து முதல் தர மிளகு கிலோ ரூ. 650 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

வெளிச்சந்தையில் ரூ. 520 வரை விற்கப்பட்ட மிளகு தற்போது அதன் தரத்தை பொறுத்து ரூ.680 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது.

போதிய மழையின்மை காரணமாக மிளகு சாகுபடி குறைந்து வருவதால் மேலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்ந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News