மது போதையில் சிக்கிய கணவர், உறவினரை மீட்க போலீசுடன் மோதல்- ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசிய பெண்
- போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர்.
- சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் லோகிதக்கன், காவலர் வெள்ளதுரை ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மடக்கி உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வந்தனர்.
இந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் வாகன ஆவணத்தை கேட்டனர். அப்போது இருவரும் இது எங்கள் சித்தப்பா வாகனம் என்றும், ஆவணங்கள் வீட்டில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் பரிசோதனை செய்ய முயன்றனர். அதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. பிடிபட்டவர்களில் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எங்களை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். உடனே வாருங்கள் என்று கூறினார்.
அப்போது சம்பவ இடத்துக்கு பெண் ஒருவர் வந்தார். அவரது கணவரும் உறவினருமே போலீசில் பிடிபட்டிருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் விடுவிக்குமாறு கூறி அந்த பெண் அதிரடி காட்டினார். போலீசாருடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட அவர் ஆபாச வார்த்தைகளையும் அள்ளி வீசினார். இதனை காவலர் வெள்ளதுரை வீடியோவாக பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தான் வைத்திருந்த தொப்பியால் திடீரென தாக்குதலிலும் ஈடுபட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.