ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணியில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
- அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.
- அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வளா்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சேரி, ஏனங்குடி,கணபதிபுரம், திருக்கண்ணபு ரம்,திருப்பத்தாங்குடி உள்ளிட்ட ஊா்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது. இருப்பினும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவா்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.
குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்ட வா்களும்,விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவா்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். அங்கு இரவுப் பணியில் இருக்கும் செவிலியா்கள் முதல் உதவி மட்டும் செய்துவிட்டு உடனடியாக நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனா்.
எனவே, இப்பகுதிகளில் இரவு நேரத்திலும் முழு சிகிச்சை கிடைக்கும் வகையில் இரவு நேரப்பணியில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.