உள்ளூர் செய்திகள்

ேகாவையில் 3 இடங்களில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-15 09:34 GMT   |   Update On 2022-10-15 09:34 GMT
  • இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புறாக்களை பறக்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோவை:

மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை மாவட்டத்தில் தெற்கு தாசில்தார் அலுவலகம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடல் ஆகிய 3 இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்தது.கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கோவை மாநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வி. ஜி. கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திருமலை ராஜா, அவைத்தலைவர் ராஜ்குமார், பொருளாளர் முருகன், பகுதி செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, கோவை லோகு, வ.ம.சண்முகசுந்தரம் மற்றும் பூம்புகார் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் காலையிலேயே தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டனர்.

காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுதவிர மத்திய அரசின் நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வி கொள்கையை தமிழகத்தில் திணிப்பதற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு புறா மூலமாக தூது அனுப்புவது போல புறாக்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கினார். இதில் வடவள்ளி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தை யொட்டி அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News