உள்ளூர் செய்திகள்

திமுக

எதிர் கோஷ்டிகளை அரவணைக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள்

Published On 2022-08-13 10:33 GMT   |   Update On 2022-08-13 10:33 GMT
  • தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட இருக்கிறது.
  • தி.மு.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவி தான் அந்தஸ்து, அதிகாரம் மிக்க பதவியாக கருதப்படுகிறது.

தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே வட்ட செயலாளர், கிளைக்கழக செயலாளர், பேரூர், ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் ஒன்றிய செயலாளர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளன.

தற்போது மாநகராட்சி பகுதிகளில் மாநகர செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சில இடங்களில் போட்டி ஏற்பட்டு உள்ளதால் கட்சி மேலிடம் வரை பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வட்ட செயலாளர் தேர்தல் நடந்துள்ளது. இன்னும் பகுதி கழகத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட இருக்கிறது. அனேகமாக இன்னும் ஒரு வாரத்துக்குள் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவி தான் அந்தஸ்து, அதிகாரம் மிக்க பதவியாக கருதப்படுகிறது. இந்த பதவியில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்களாக உள்ளனர். தற்போது இந்த பதவிக்கு தேர்தல் நடத்தும் போது போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் நினைக்கின்றனர்.

அதற்கேற்ப எதிர்கோஷ்டிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளையும் அரவணைத்து மாவட்ட செயலாளர்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

இதற்கு காரணம் தேர்தலின்போது எதிர்கோஷ்டியினர் தங்களை எதிர்த்து போட்டியிட மனுதாக்கல் செய்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பிரச்சினை கொண்டு செல்லப்படும் என்று பயப்படுகிறார்கள்.

கட்சி தலைமையிடம் பஞ்சாயத்து செல்லக்கூடாத அளவுக்கு மாவட்டத்திலேயே பிரச்சினையை தீர்த்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கருதுவதால் தி.மு.க.வில் எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த போக்கு தொண்டர்கள் மத்தியில் வியப்பை கொடுத்து உள்ளது.

Tags:    

Similar News