உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கார்மேகம் இ-சேவை மையத்தில் ஆய்வு செய்த காட்சி. 

ஏற்காட்டில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-02-22 09:52 GMT   |   Update On 2023-02-22 09:52 GMT
  • கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து அரசு துறை தலைமை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • மேலும் நேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைகிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் முழுமையாக கிடைக்கப் பெறுகிறதா என்பது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து அரசு துறை தலைமை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து ஏற்காடு மலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொறுப்பு அலுவலர்கள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் நேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மலை கிராமங்களுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக கிடைத்திடும் வகையில் அரசு அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஏற்காடு பகுதியில் உள்ள அரசு மாணவர் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? அவர்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்கிறதா? என்றும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களின் வருகை குறித்தும், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், ஆவின் பொதுமேலாளர் விஜய் பாபு, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, தனித்துறை ஆட்சியர் மயில், இணை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News