உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிப்பட்டி அரசு பள்ளியில் இன்று நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு மையத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குபதிவு- வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்

Published On 2022-07-09 09:26 GMT   |   Update On 2022-07-09 09:26 GMT
  • மொரப்பூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
  • வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தருமபுரி, 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பதவி விலகல் போன்ற காரணங்களால் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.

தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, கிராம ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றில் காலி இடங்களுக்கு இடைத்தேர்தல் வாக்குபதிவு நடந்தது.

காரிமங்கலம் ஒன்றியம் 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் குட்லானஅள்ளி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், பாலக்கோடு ஒன்றியம் பேளார அள்ளி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், மொரப்பூர் ஒன்றியம் மொரப்பூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

தருமபுரி மாவட்டத்தில் 4 இடங்களுக்கு 12 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குசாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், கொப்பக்கரை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், தளி ஊராட்சி ஒன்றிய 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

இதனால் கெலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பேவநத்தம், பொம்மதாதனூர், கொப்பக்கரை ஆகிய ஊராட்சிகள் மற்றும் தளி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னியாளம், கக்கதாசம், தேவருளிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த பகுதிகளில் வாக்குசாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அப்பகுதி வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குசாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News