உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி கலவரத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை- சிறப்பு குழு அமைத்து டிஜிபி உத்தரவு

Published On 2022-09-05 19:03 GMT   |   Update On 2022-09-05 19:03 GMT
  • சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் சிறப்பு குழு இயங்கும்.
  • வதந்தி பரப்புவோர் சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்காகவும் இந்த குழு பயன்படும். இதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழுவினை தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கணினி திறன் மற்றும் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும். 

குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்யும் வகையில் இந்த குழு செயல்படும். சாதி மத அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும் வகையிலும் இந்த குழு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News