புவனகிரியில் கறிக்கடை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்
கடலூர்:
மேல்புவனகிரியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62). சிதம்பரத்தில் கறிக்கடை வைத்திருந்தார். நேற்று மாலை இவர், கறி கடையை மூடி விட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.இதனை கண்ட அவரது மனைவி, ஏன் இது போல் குடித்துவிட்டு வருகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி அவரது வீட்டின் மேல் மாடியில் உள்ள ரூமிற்கு சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் கீழே வரவில்லை.
சந்தேகமடைந்த ராமமூர்த்தியின் மனைவி மேலே சென்று பார்த்தபோது ரூமில் கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு திரண்ட உறவினர்கள், ராமமூர்த்தியின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறினர். இதையடுத்து ராமமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.