கடையம் வட்டாரத்தில் நெல் பயிருக்கு பதில் மாற்று பயிர் சாகுபடி-வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
- தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை.
- நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் அறுவடை செய்யலாம்.
கடையம்:
கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி வெளியிட்டு ள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையம் வட்டாரத்தில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கடனா மற்றும் ராமநதி அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை.
இந்த காலகட்டத்தில் விவசாயிகள் நெல் பயிர் நடவு செய்ய நெல் நாற்று விடும் பணி நடக்கிறது. பின்வரும் காலங்களில் மழை பெய்ய தவறி விட்டால் நெல் பயிரை காப்பாற்ற முடியாது. எனவே விவசாயிகள் குறைந்த வயது நெல் ரகங்களான ஐ.ஆர். 50, ஆடுதுறை 45 போன்ற நெல் ரகங்கள் அல்லது தண்ணீர் தேவை குறைவாக உள்ள உளுந்து, சோயா மொச்சை, நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து தண்ணீரை சேமித்து கொள்ளலாம்.
மேலும் நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நாற்று பாவி நடவு செய்யாமல் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்வதால் 10 நாட்களுக்கு முன் நெல் பயிரை அறுவடை செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.