மாநகராட்சி சுகாதார துறையினர் திடீர் சோதனை: குடோனில் பதுக்கிய ஒன்றரை டன் தடை பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
- ஓசூர் நாமால்பேட்டை பகுதியில் உள்ளி குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகள்,டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் ,அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் குவிந்தன.
இதன் அடிப்படையில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், மாநகராட்சியின் நகர் நல அலுவலர் அஜிதா தலைமையில், மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள், ஓசூர் நாமால்பேட்டை பகுதியில் உள்ளி குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகள்,டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ 5 லட்சத்திற்கும் மேல் என்று கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஓசூர் ஆனந்த நகர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு சென்று துண்டு,துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்டன.
மேலும் இதனை பதுக்கி வைத்திருந்த 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.39,000 அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடப்பட்டது.