உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை

தொடர் மழை முல்லைபெரியாறு அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2023-07-26 04:09 GMT   |   Update On 2023-07-26 04:09 GMT
  • நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது.
  • லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கூடலூர்:

முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குறைந்து கொண்டே வந்த அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 1091 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1321 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2786 மி.கனஅடியாக உள்ளது.

கேரளாவில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பெரியாறு அணையிலிருந்து 400 கனஅடி திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

71 அடி உயரம் உள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 49.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1895 மி.கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 76.32 அடியாகவும் உள்ளது.

பெரியாறு 16, தேக்கடி 12.2, சோத்துப்பாறை 4, கூடலூர், உத்தமபாளையம், சண்முகாநதிஅணை பகுதிகளில் தலா 1 மி.மீ என மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News