உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில்w மழை பெய்த காட்சி.

செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் மழை நீடிப்பு

Published On 2023-04-11 09:04 GMT   |   Update On 2023-04-11 09:04 GMT
  • செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
  • நேற்றும் மாலை 6 மணி முதல் சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் மழை பொழிகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை 6 மணி முதல் சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்திற்கு இணையாக வெயில் அடித்து வந்த நிலையில், இந்த தொடர் மழையால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி செங்கோட்டையில் 23.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசியை அடுத்த ஆய்க்குடியில் 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேலும் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 17.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தற்போது குண்டாறு அணையில் 19.50 அடி நீர் இருப்பு உள்ளது.

கடனா, ராமநதி அணைகளில் நீர்மட்டம் தலா 31 அடி உள்ளது. பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 10.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News