மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்த காட்சி.
இடிந்தகரை அருவிக்கரையில் ரூ.10 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி - சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
- மீனவர் நலனிற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- மீனவர்களுக்கு எந்த இடையூறும் வராமல் சுவர் அமைத்து கொடுக்கும்படி செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது.
நெல்லை:
ராதாபுரம் அருகே விஜயா புரம் ஊராட்சி இடிந்தகரை அருவிக்கரையில் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.
ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீனவர் நலனிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இடிந்தகரை அருவிக் கரை பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களின் நலனிற்காக இடிந்தகரை அருவிக்கரை பகுதியில் மீன் இறங்குதளம் அமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு கடற்கரையில் இருந்து கடலை நோக்கி 100 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்ட நேர் சுவர் அமைக்கும் பணிக்கும், அதே போன்று 10 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளத்திற்கு மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் தொடர்பாக பங்கு தந்தை தலைமையில், மீனவர் நலத்துறையினரிடமும், மற்றும் இக்கிராமத்தில் உள்ள மக்களிடமும் கலந்து ஆலோசித்து மீன் இறங்குதளம் எந்த இடத்தில் அமைத்தால் மீனவர்களுக்கு பாதுகாப்பாகவும், பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்து அமைப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த இரண்டு சுவர்கள் அமைப்பதால் மீனவர்க ளுக்கு எந்த பாதிப்புகளும், இடையூறும் வராமல் அமைத்து கொடுக்கும்படி செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது. இப்பகுதியில் 12,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சரவணக்குமார் , உதவி செயற்பொறியாளர் குருபாக்கியம் , இளநிலை பொறியாளர் அருண்குமார் கவுதம், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.