உள்ளூர் செய்திகள்

அமைச்சர் சேகர்பாபு 

புதுக்கோட்டை தேர் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2022-08-01 08:21 GMT   |   Update On 2022-08-01 08:21 GMT
  • தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப் பட்டுள்ளது.
  • தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம்.

புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கோயில் பணியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் காயமடைந்தவர்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைசசர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

புதுகோட்டை கோயில் தேர் விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 7 பேர் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளனர். ஒருவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 809 திருக்கோயில்களில் 981 தேர்தல்கள் உள்ளன, எல்லா தேரோட்டத்திலும் விபத்து ஏற்படுவதில்லை. சில தேர் விபத்து பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்காலங்களில் விபத்துக்களை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்துக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தேர் விபத்து நடைபெறாமல் இருக்க இந்து சமய அறிநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். எல்லா வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை தேரோட்டத்திற்கு அனைத்து துறைகள் சார்பிலும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து யார் அலட்சியம் காரணமாக நடைபெற்றிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார்.

புகாரின் அடிப்படையில் கோயில் ஊரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கவனக்குறைவால் விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு தேரில் இருந்து சிலைகள் கோயிலுக்குள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான கோயில் தேர், நல்ல நாள் பார்த்து பழுது பார்க்கப்படும். அதன் பின்னர் மீண்டும் தேரோட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News