உள்ளூர் செய்திகள்

ராஜவாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் பலி- சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்

Published On 2023-06-06 05:24 GMT   |   Update On 2023-06-06 05:24 GMT
  • சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார்.
  • வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது.

பரமத்திவேலூர்:

தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி (வயது 20). பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள அவருடன் பயின்று வரும் சக கல்லூரி மாணவர் வாசுதேவன் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதமாக தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது சிரஞ்சீவி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ராஜா வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த அவருடன் வந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். பின்னர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் ராஜவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர்.

வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜேடர்பாளையம் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு நீடிக்கிறது.

Tags:    

Similar News