உள்ளூர் செய்திகள்

நெல்கொள்முதல் நிலையம் அமையவுள்ள இடத்தை கலெக்டர் முரளிதரன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

கூடலூர் அருகே அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு

Published On 2022-08-13 10:31 IST   |   Update On 2022-08-13 10:31:00 IST
  • தேனி மாவட்டத்தில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
  • நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

கூடலூர்:

தேனி மாவட்டம், கூடலூர் அருகே வெட்டுக்காடு, கப்பாமடை, தாமரைக் குளம், ஒட்டன் குளம், பாரவந்தான், பி.டி.ஆர் வட்டம், ஒழுகுவழி சாலை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தப் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கடந்த சில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடங்களில் கொள்முதல் நிலையம் அமைத்து அங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.இந்த இடங்கள் விவசாய பணிகளுக்கு போதுமானதாக இல்லை.மேலும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதனால் விற்பனை செய்த நெல் மூட்டைகளை தார்ப்பாய்கள் மூலம் மூடி வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. எனவே கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, முல்லைச் சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், துணை தலைவர் ராஜா, பொருளாளர் ஜெயபால் மற்றும் விவசாயிகள் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வாளர் மாளிகை வளாகம் பகுதியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.கவுசல்யா உணவுப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், தாசில்தார் அர்ஜூனன், பெரியார் அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News