உள்ளூர் செய்திகள்

தோலம்பாளையம் ராஜீவ்காந்தி நகரில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

Published On 2023-05-15 15:19 IST   |   Update On 2023-05-15 15:19:00 IST
  • கனமழை காரணமாக மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.
  • பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக இந்திரா காந்தி தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் கடந்த 1991 -ம் ஆண்டு கட்டப்பட்டன.

வீடுகள் கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தற்போது இங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் அடிக்கடி இந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரையின் காரைகள் பெயர்ந்து விழுந்து விடுகி ன்றன. மேலும் தற்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் குடும்பத்துடன் வசிக்கும் மக்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சிலர் வீடுகள் எப்போது இடிந்து விடுமோ என்று அச்சத்தில் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு தோலம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். காலியாக இருக்கும் இந்த வீடுகளில் உபயோகப்படுத்தப்படாத பொருட்களை போட்டு வைக்கும் அறையாக மட்டுமே பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தோலம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தாங்கள் அச்சத்துடனேயே வீடுகளில் வசித்து வரக்கூடிய கட்டாய சூழ்நிலையில் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சாந்தாமணி(50) என்பவர் கூறுகையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். தற்போது இந்த வீடுகள் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலானதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகின்றன. கட்டிடத்திலும் பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது.இதனால் குழந்தைகளுடன் வசிக்கும் நாங்கள் உயிர் பயத்தில் வசித்து வருகிறோம். எனவே ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு தங்களது குடியிருப்பு பகுதியினை புனரமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.

அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ்(30) கூறுகையில் குழந்தைகளுடன் இந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் தாங்கள் கட்டிடம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், ஏற்கனவே பலமுறை குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டி ருக்கையில் மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக தங்களுக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தங்களது வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News