செட்டியாபத்து கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்
- கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
- மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும்.
உடன்குடி:
உடன்குடி ஊராட்சி ஓன்றியம் செட்டியாபத்து ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் சிவலூரில் நடைபெற்றது. செட்டியாபத்து ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்று பேசுகையில், மரங்களை வளர்ப்பது மனிதனின் பொறுப்பு, ஒவ்வொரு மனிதனும் ஒரு மரம் வளர்க்க வேண்டும், மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும் என்றார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளை அவர் வழங்கினார்.
கூட்டத்தில் செட்டியாபத்து ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், சிவலூர் ஊர்தலைவர் முருகன், வேளாண்மைத்துறை அலுவலர் அஜித்குமார், பற்றாளர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சியின் வரவு செலவினங்கள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் ஆகிய திட்டங்கள், பயனாளிகளின் தகுதிகள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் கணேசன் நன்றி கூறினார்.