உள்ளூர் செய்திகள்

மேற்கூரை இடிந்து விபத்து - உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

Published On 2023-10-16 13:41 IST   |   Update On 2023-10-16 13:41:00 IST
  • உடுமலையில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
  • சமுதாய நலக்கூடம் ஏற்கனவே சிதிலமடைந்திருந்தது.

சென்னை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம்-பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் உள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள் சமுதாய நலக்கூடம் முன் பஸ்சுக்காக காத்து நின்று உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வார்கள்.

இன்று காலை கொழுமம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான மணிகண்டன் (28), கவுதம் (29), முரளிராஜன் (35) ஆகியோர் வேலைக்குச் செல்வதற்காக பஸ்சுக்காக சமுதாய நலக்கூடம் முன் காத்து நின்றனர்.

உடுமலை பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சமுதாய நலக்கூடத்தின் முன்புற சிலாப் திடீரென இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. இதில் மணிகண்டன், கவுதம், முரளிராஜன் ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்குப் போராடினார்.

இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் உடனே 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனே இது குறித்து குமரலிங்கம் போலீஸ் மற்றும் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி அடியில் சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டனர். ஆனால் 3 பேரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்குச் செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்ற 3 தொழிலாளர்கள் மேற்கூரை இடிந்து பலியான சம்பவம் உடுமலை பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 பேர் பலியான சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் 3 பேரின் உடல்களைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர், சாவடி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News