முகத்தில் மிளகாய் பொடி தூவி, விவசாயியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு
- மர்ம நபர்கள் 2 பேர் ராம ஜெயத்தை வழிமறித்து வாகனத்தை நிறுத்தினர்.
- மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை முகத்தின் மீது தூவினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 67). விவசாயி. இவர் நேற்று மாலை அவரது நிலத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சனத்குமார் ஆற்றின் அருகே சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராம ஜெயத்தை வழிமறித்து வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது துணிப்பை யில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ராம ஜெயத்தின் முகத்தின் மீது தூவினர். பின்னர் அவர் எரிச்சலால் கத்தினார். பின்னர் பிளக்ஸ் பேஸ்டால் அவரது வாயை ஒட்டினர்.
இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு 2 பேரும் தப்பி ஓடினர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து ராமஜெயம் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.