உள்ளூர் செய்திகள்

ஓசூர் மல்லிகார்ஜுன சாமி கோவிலில் தேர்திருவிழா

Published On 2023-02-19 09:42 GMT   |   Update On 2023-02-19 09:42 GMT
  • மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது.
  • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அம்ருதா மல்லிகார்ஜுன சாமி கோவில் உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 600 ஆண்டுகளுக்கு முன்பு சாமியின் திருமண் கொண்டு வரப்பட்டு இங்கு இந்த கோவிலானது, பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று மல்லிகார்ஜுன சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது.

முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து, எஸ் .முதுகானப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தேர் கிராமத்தின் வீதிகளில் சுற்றி வந்து பின்னர், கோயிலுக்கு அருகே நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவ ஜாம பூஜை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவில், திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News