உள்ளூர் செய்திகள்

கொள்ளையர்கள் புகுந்த விநாயகர் கோவிலை படத்தில் காணலாம். 

கடலூரில் பரபரப்பு : விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்

Published On 2022-08-01 06:02 GMT   |   Update On 2022-08-01 06:02 GMT
  • கடலூரில் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினர்.
  • கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திரவுபதி அம்மன் சன்னதியும் அமையபெற்று உள்ளது.இன்று அதிகாலை விநாயகர் கோவிலில் இருந்து திடீரென்று அதிக ஒலியுடன் அலாரம் அடித்தது. இதனை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியில் வந்து பார்த்தபோது விநாயகர் கோவிலில் உள்ள திரவுபதி அம்மன் சன்னதி முன்பு இருந்த இரும்பு கேட் திறந்து இருந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இரும்பு கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது.கோவில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலில் இருந்த பூட்டு உடைந்து சிதறி கிடந்தன. அப்போது திடீரென்று அலாரம் அடித்த காரணத்தினால் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யார்? என சி.சி.டி.வி காமிரா மூலம் போலீசார் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூரில் மையப் பகுதியாக உள்ள மஞ்சக் குப்பம் விநாயகர் கோவிலில் அதிகாலையில் பூட்டை உடைத்து உண்டியலில் மர்ம நபர்கள் திருட முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. மேலும் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News