உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான ஆதிமூலம்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் மீது லாரி ஏறியதில் தலை நசுங்கி பலியானார்

Published On 2023-01-03 22:30 IST   |   Update On 2023-01-03 22:30:00 IST
  • சாலையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
  • விபத்துக்கு காரணமான லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பெரியபாளையம்:

சென்னை, மதுரவாயல் அருகே உள்ள நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஆதிமூலம் (வயது54). இவர் மாநகரப் போக்குவரத்துக் கழக அம்பத்தூர் பணிமனையில் பிராட்வே முதல் திருநின்றவூர் வரையில் இயக்கப்படும் தடம் எண் 71 ஈ என்ற பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் தனது தம்பி கார்த்திகேயன்(வயது50) என்பவரது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றார். பூச்சிஅத்திப்பேடு-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வாணியன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது சாலையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் சென்றபோது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

அப்பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஆதிமூலத்தின் தலையில் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஆதிமூலம் பலியானார். கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான ஆதிமூலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இந்த விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News