உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில் பஸ் மோதி தந்தை-மகள் பலி

Published On 2022-07-03 08:00 GMT   |   Update On 2022-07-03 08:00 GMT
  • விபத்தில் குமரவேலு, சாய்சக்தி, நிதிஷ்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
  • பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தப்பிச்சென்ற நிலையில், விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குத்தாலம்:

மயிலாடுதுறையில் அரசுப்பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை-மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உறவினர் மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்த குமரவேல் (வயது 38). அவரது மகள் சாய்சக்தி (3), உறவினர் மகன் நிதிஷ்குமார் ஆகியோர் மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் குமரவேலு, சாய்சக்தி, நிதிஷ்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குமரவேல், சாய்சக்தி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரவேலுவின் உறவினர் மகனான நிதிஷ்குமார் என்ற சிறுவன் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News