உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி: தடுக்க சென்ற அண்ணிக்கு சரமாரியாக அடி, உதை-போலீஸ் விசாரணை

Published On 2023-11-10 09:00 GMT   |   Update On 2023-11-10 09:00 GMT
  • மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெள்ளை முருகனின் முதுகு பகுதியில் குத்தினார்.
  • பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சொத்து தகராறு காரணமாக, தனது சொந்த அண்ணனை மச்சானுடன் சேர்ந்து கொண்டு கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மருக்காலம் பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன். விவசாயியான இவருக்கு வெள்ளை முருகன் (வயது 35), காந்தி (31) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடு, நிலம் உள்ளது.

இதை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த ஆறு வருடங்களாக தீர்வு காணாமல் பிரச்சனை நீடித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஒரே இடத்தில் இருவரது வீடும் உள்ளதால் அண்ணன், தம்பி இடையே மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த காந்தியின் மச்சான் பூங்குன்றம் (32) என்பவர் வெள்ளை முருகனின் தலை, கால் பகுதிகளை சரமாரியாக தாக்கினார்.

மேலும், ஆத்திரமடைந்த காந்தியும் தனது பங்குக்கு அண்ணன் வெள்ளை முருகனை தரையில் இருந்த கற்களை கொண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அவர், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வெள்ளை முருகனின் முதுகு பகுதியில் குத்தினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளை முருகனின் மனைவி சந்தியா தடுக்க வந்த வந்தபோது அவரையும் காந்தி சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த வெள்ளை முருகன், அவரது மனைவி சந்தியா ஆகிய 2 பேரையும் உடனடியாக உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சொத்து தகராறில் அண்ணனை, தம்பி கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News