ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
தமிழக அரசை கண்டித்து நெல்லையில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- பா.ஜ.க. சார்பில் இன்று தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.
நெல்லை,அக்.27-
தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை வண்ணார் பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை. இந்தியாவில் நேரு ஆட்சி காலத்தில் ஏ,பி,சி என 3 வகைகளாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதில் சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தாய் மொழி கட்டாயம் எனவும், கூடுதலாக இந்தி மொழியை பயிற்றுவிக்கலாம் எனவும் மத்திய அரசு கூறி உள்ளது.
ஆனால் தாய் மொழி கட்டாயம் என்பதை தி.மு.க. மறைத்துவிட்டு, மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக கூறி மக்களிடம் ஏமாற்று வேலை நடத்துகிறார்கள். மேலும் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை திசை திருப்பும் முயற்சியாகவே தி.மு.க. இளைஞரணி மூலம் இந்தி திணிப்பு எனக்கூறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளது. தி.மு.க. தமிழுக்காக வோ, தமிழர்களுக்காகவோ பாடுபடவில்லை.
கோவை கார் வெடிப்பு சம்பவம் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிப்பதை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தேசிய செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் வெங்கடாசலபதி என்ற குட்டி, மாவட்ட பொருளாளர் பண்ணை பாலகிருஷ்ணன், நிர்வாகி தமிழ்ச்செல்வன், வேல் ஆறுமுகம், பாபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.