உள்ளூர் செய்திகள்

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவதூறு வீடியோ வெளியிட்ட பா.ஜனதா நிர்வாகி கைது

Published On 2022-08-02 15:40 IST   |   Update On 2022-08-02 15:40:00 IST
  • செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி பிரதமர் மோடி கடந்த 28-ந்தேதி சென்னை வந்திருந்தார்.
  • சிலைகளை உடைக்கவேண்டும் என வீடியோ வெளியிட்டுள்ளதாக புளியங்குடியை சேர்ந்த தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

புளியங்குடி:

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவையொட்டி பிரதமர் மோடி கடந்த 28-ந்தேதி சென்னை வந்திருந்தார்.

அவரது வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த மோடியின் உருவப்படம் மீது சிலர் கரி பூசியதாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜனதா நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தென்காசி மாவட்ட பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரும் அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவர் இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதமாக பெரியார் சிலைகள் மீது அவதூறு செய்ய வேண்டும் எனவும், சிலைகளை உடைக்கவேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக புளியங்குடியை சேர்ந்த தி.மு.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வீடியோவை வெளியிட்டவர் புளியங்குடி அருகே உள்ள தாருகாபுரம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன்(வயது 28) என்பதும், அவர் மாவட்ட பா.ஜனதா விளையாட்டு மேம்பாட்டு துறை தலைவராக இருந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ), 505 உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News