உள்ளூர் செய்திகள்

'எங்களை கொன்று விடுவதாக மிரட்டியதால் வழிமறித்து தீர்த்துக் கட்டினோம்'

Published On 2023-02-19 08:42 GMT   |   Update On 2023-02-19 08:42 GMT
  • 5-ம் தேதி இரவு மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுபற்றி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளனர்.

சேலம்:

சேலம் அயோத்தி–யாப்பட்டணம் அருகேயுள்ள காட்டூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன் (வயது 44).

இவரை கடந்த 5-ம் தேதி இரவு மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுபற்றி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் காட்டூரை சேர்ந்த ரவுடி அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித்குமார் ஆகிய 4 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும், ராஜா, சீனிவாசன், ஹரி, சிவன், குழந்தைவேல் ஆகிய 4 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சரணடைந்த ரவுடி அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித்குமார் ஆகிய 4 பேரையும் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமை–யிலான போலீசார், 4 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில், 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளனர்.

வலசையூர் பேக்கரியில் அன்பழகன் பங்குதாரராக இருந்து சமீபத்தில் விலகியுள்ளார். இருப்பினும் அந்த பேக்கரிக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதை ரவுடி காட்டூர் ஆனந்தன் கண்டித்துள்ளார். அதனால் ஆனந்தனை தீர்த்து கட்ட முடிவு செய்திருந்தேன் என அன்பழகன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் சக்திவேல் தனது நண்பர்களுடன் வலசையூர் பகுதியில் பைக்கில் சுற்றியுள்ளார். அப்போது காட்டூர் ஆனந்தன் அவர்களை மறித்து, இந்த பக்கம் வந்தால் கொன்று விடுவதாக மிரட்டினார். அதனால், அன்பழகனுடன் சேர்ந்து ரவுடி ஆனந்தனை வெட்டிக் கொன்றோம் எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News