ரணகுண மகாகாளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
- முன்னதாக பந்தக்கால் முகூர்த்தமும் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, அலகுகாவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த மாத்தி கிராமத்தில் உள்ள ரணகுண மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
முன்னதாக பந்தக்கால் முகூர்த்தமும் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கும்பகோணம் அரசலாற்றங்கரையிலிருந்து சுமார் 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் சக்திகரகம், அக்னி கொப்பரை, வேல், காவடி, அலகுகாவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து கோவிலில் மகா காளியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.