உள்ளூர் செய்திகள்

சிவகிரி அருகே மூதாட்டியை ஏமாற்றி ரூ.1.44 லட்சத்தை திருடிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

Published On 2025-05-23 17:15 IST   |   Update On 2025-05-23 17:15:00 IST
  • ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார்.
  • போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டம் பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சடையப்பன் மனைவி பாப்பாள் (70). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்.

பாப்பாள் வங்கி கணக்கில் அவருக்கு வரும் ஓய்வூதிய பணம் ரூ.1.76 லட்சம் சேமித்து வைத்திருந்தார். இதனை அவருக்குத் தெரிந்த அரச்சலூர் ஜே.ஜே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால் (38) என்பவரிடம் அந்தப் பணத்தை எடுத்து தர சொல்லி உள்ளார்.

கோபாலும் மூதாட்டி ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவது போல் உதவி செய்து நடித்து பாப்பாள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை தெரிந்து கொண்டார். இதை அடுத்து பாப்பாளை ஏமாற்றி அவரது ஏ.டி.எம் கார்டினை எடுத்துக்கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என மொத்தம் சிறுக சிறுக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து திருடி உள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாப்பாள் இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோபால் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News