சேலத்தில் ஏல சீட்டு நடத்தியவர் தூக்குப் போட்டு தற்கொலை
- ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது.
சேலம்:
சேலம் டவுன் ஜலால் புறா வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி யுவராணி, நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைக் கண்ட யுவராணி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ராஜேந்திரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ராஜேந்திரன் நடத்தி வந்த ஏல சீட்டில் பணம் எடுத்த சிலர் அதை திருப்பி தராமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பணம் கட்டியவர்கள், பணத்தை கேட்ட போது அதை தர முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.