உள்ளூர் செய்திகள்

கோவை போத்தனூரில் அரசு வங்கியில் கொள்ளை முயற்சி

Published On 2022-12-30 15:28 IST   |   Update On 2022-12-30 15:28:00 IST
  • வங்கி ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
  • கொள்ளையர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குனியமுத்தூர்

கோவை போத்தனூர் பொள்ளாச்சி ரோடு சிட்கோ பகுதியில் அரசு வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு ராஜ்குமார்(36) என்பவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தினமும் காலை 9 மணிக்கு வங்கியை திறந்து அலுவல் பணிகளை கவனித்து விட்டு இரவு 10 மணிக்கு வங்கியை பூட்டி விட்டு செல்வது வழக்கம். இதேபோல் அவர் சம்பவத்தன்று இரவு வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை அந்த பகுதி மக்கள் அவ்வழியாக நடந்து சென்றனர். அப்போது வங்கி ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து வங்கி மேலாளர் ராஜ்குமார் மற்றும் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் வங்கி மேலாளர் வந்தனர்.மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கியில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசார ணையில், நள்ளிரவு நேரத்தில் வங்கியின் அருகே சில மர்மநபர்கள் சுற்றி திரிந்துள்ளனர்.ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா? என பார்த்து விட்டு, வங்கியின் அருகே சென்றனர்.

பின்னர் மர்மநபர்கள் வங்கியின் ஜன்னல் கம்பியை ஆக்ஷா பிளேடால் அறுத்து உள்ளே செல்வதற்கு முயன்றுள்ளனர். அந்த சமயம் அந்த வழியாக திடீரென வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் மாட்டி கொள்வோம் என நினைத்து கொள்ளை முயற்சியை பாதியில் விட்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து, கொள்ளையர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News