குன்னூரில் நகராட்சி அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
- குன்னூர் டோபிகானா பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு
- ஊழியர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விதிமீறிய கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக நகராட்சியில் அதிகாரிகள் முறையாக இல்லாததே இதற்கு காரணம். இதனால் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களாக சிலர் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அவர், திடீரென அலுவலகம் முன்பு வைத்து தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனை திறந்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இதனை அங்கு இருந்த ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடடினயாக ஓடி சென்று, அதனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.
அப்போது, அவர் டோபி கானா பகுதியில் சிலர் குடியிருப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்த புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
எனவே இவர்களை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகவே குன்னூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிங்கள் அதிகளவில் கட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.