உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்- தி.மு.க. கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் மீது புகார்

Published On 2022-06-14 09:26 GMT   |   Update On 2022-06-14 09:26 GMT
சேலம் அருகே பரோட்டா கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் மீது புகார் செய்யப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கோணகாபாடி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. தனியார் பஸ் டிரைவர். இவரது மகன் செந்தில்குமார். இவர் சேலம் மெயின் ரோடு தண்டுமாரியம்மன் கோவில் அருகே கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை தாரமங்கலம் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் என்பவர் செந்தில்குமார் கடைக்குச் சென்று பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பரோட்டா இலவசமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு சென்ற அரவிந்த் அடுத்த நாள் மது போதையில் கூட்டாளிகள் 4 பேருடன் செந்தில்குமாரின் ஓட்டலுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் செந்தில்குமாரின் கண் மற்றும் நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து செந்தில்குமார் கூறும்போது திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் இலவசமாக பரோட்டா கேட்டு என்னை தகாத வார்த்தையில் பேசி அடித்தனர். இதுபற்றி நான் போலீசில் கொடுத்த வழக்கை திரும்பப் பெறுமாறும், இல்லை என்றால் ஓட்டலை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் மீண்டும் கடை நடத்த பயமாக உள்ளது. எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மீண்டும் கடையை நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News