உள்ளூர் செய்திகள்

சங்காபிஷேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த 108 வலம்புரி சங்குகளை படத்தில் காணலாம்.

பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் கோவிலில்108 சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை

Published On 2023-02-06 09:43 GMT   |   Update On 2023-02-06 09:43 GMT
  • 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
  • ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் கோவிலில் தைப்பூச திருநாள் விழாவில் இந்த ஆண்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

வல்லப விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக குண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதினார்கள். அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு பால் ,தயிர், தண்ணீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று காலையில் பாலசுப்பிரமணியனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் மஹா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்துடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட காவடிகளுக்கு காவடி பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை அனைவருக்கும் நீர் மோர் பாணகமும் மகா அன்னதானமும் நடைபெற்றது .விழா ஏற்பாட்டினை வல்லவ விநாயகர் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


பெண்கள் குத்துவிளக்குகளை கொண்டு வந்து தீபம் ஏற்றி திருவிளக்கு பூஜை செய்த போது எடுத்த படம்.

 


Tags:    

Similar News