உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் 3 மதகு வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் வினாடிக்கு 7 ஆயிரத்து 549 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

Published On 2022-08-05 10:13 GMT   |   Update On 2022-08-05 10:13 GMT
  • அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
  • தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போல கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 209 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 ஆயிரத்து 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். தற்போது அணையில் நீர் இருப்பு 42.64 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளிலும், கரையோரத்திலும் மற்றும் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரக்கூடிய நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இன்று காலை 6 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 735 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 549 கனஅடி வீதம் தண்ணீர்திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நீர்மட்டம் 52 அடியை எட்டி அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 7,549 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

உபரிநீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News