ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநர் ஆய்வு
- தரிசு நில தொகுப்பினை பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
- விவசாயிகளுக்கு மானிய விலையில் விசைத் தெளிப்பான் வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி வேளாண் வட்டாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்புகளை விளை நிலங்களாக மாற்றுதல் மற்றும் தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் மற்றும் வரப்பு பயிருக்காக உளுந்து விதைகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தொடர்பாக ஸ்ரீவெங்கடேஸ்வரா புரம் கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் மற்றும் துணை வேளாண்மை இயக்குனர் (மாநில திட்டம்) பழனி வேலாயுதம் ஆகியோர் திட்டம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தரிசு நில தொகுப்பினை பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விசைத் தெளிப்பான் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் வழங்கிய தென்னங் கன்றுகள் நடவு பகுதியினை நிகழ்ச்சியின்போது ஆய்வு செய்தனர். மேலும் பராமரிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி, வேளாண் அலுவலர் திருச்செல்வன், உதவி வேளாண் அலுவலர் நீலகண்ட பிள்ளை மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.