உள்ளூர் செய்திகள்

பொறி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

ஆயுத பூஜை நெருங்கி வரும் நிலையில் பொரி மூட்டைகளின் விலை கிடுகிடு உயர்வு

Published On 2022-10-01 07:55 GMT   |   Update On 2022-10-01 07:55 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
  • தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமத்தியைச் சேர்ந்த துரையன் கூறியதாவது:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் பகுதியில் தயார் செய்யப்படும் பொரிக்கு, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.பொரி தயாரிப்பதற்கான கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் வாங்கி வந்து பின் அதை ஊறவைத்து அரிசியாக எடுத்து பெரி தயார் செய்து வந்தோம்.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகளே நேரடியாக அரிசியாக கொண்டு வந்து பொரி தயாரிக்கும் எங்களிடம் விற்பனை செய்கின்றனர். அந்த அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் நாங்கள் பொரி தயார் செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு 50 கிலோ கொண்ட பொரி தயாரிக்கும் அரிசி சிப்பம் ஒன்று ரூ.1750 க்கு வாங்கி வந்தோம். ஆனால் தற்போது 50 கிலோ கொண்ட சிப்பம் அரிசி ரூ.2500 க்கு வாங்கி வருகிறோம். இதன் காரணமாக கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது.தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பொரி அனுப்பப்படுகிறது.ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரமத்தி வேலூர் பகுதியில், பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது.

Tags:    

Similar News