பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம்
- பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
- நீண்ட நாள் உயிர் வாழலாம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.மகாலட்சுமி, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சரவணன், சார்பு நீதிபதி ஜெயசூரியா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலர் அழகேசன், வழக்குரைஞர்
சங்கத் தலைவர் மனோகரன், மாவட்ட நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா பயிற்றுநரும், இயற்கை மருத்துவருமான முத்துக்குமார் கலந்து கொண்டு யோகா பயிற்சியளித்தார்.
சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகா பயிற்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, யோகாவானது மனிதனின் உள்ளார்ந்த நல்வாழ்வுக்கான அறிவியல் அணுகுமுறையை உருவாக்குவதற்கான ஒருவகையான அடித்தளமாகும் என்றார்.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக கலோரிகள் உள்ள உணவை உட்கொண்டு உடலுழைப்பு இல்லாததால் மன அழுத்தம், இதய நோய், மனச்சோர்வு, உடல் பருமன், படபடப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.
தினமும் யோகா பயிற்சி செய்வதால் இத்தகைய நோய்களிலுருந்து விடுதலை பெற்று, உடல் மற்றும் மனம் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் தடுக்கவும் வயது மூப்பை தடுத்து நீண்ட நாள் உயிர் வாழலாம் என்றார்.
பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.