உள்ளூர் செய்திகள்

உலக காகித தின கொண்டாட்டம்

Published On 2023-08-02 09:26 IST   |   Update On 2023-08-02 09:26:00 IST
  • அரியலூரில் உலக காகித தின கொண்டாட்டம் நடைபெற்றது
  • காகித பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்க உரை

 அரியலூர்,

அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், உலக காகித தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட மைய நூலகர் செசிராபூ கலந்து கொண்டு பேசுகையில், உலகில் காகித பயன்பாடு மிகவும் முக்கியமானது. சமூக ஊடகங்கள் மின்னணு கருவிகள் எவ்வளவோ இருந்தாலும், காகிதம் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை. மக்களுக்கு செய்திகளை வழங்க செய்தித்தாள்களாகவும், அறிவு சுரங்கங்களான புத்தகங்களை அச்சிடுவதற்கும் காகிதங்கள் மிகவும் முக்கியமாக பயன்படுகின்றன.71% காகித உற்பத்தி மறுசுழற்சி முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன .காடுகளை அழித்து தான் காகிதம் உருவாக்கப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.காகித ஆலைகளால் அதிகமாக வளர்க்கப்படும் மரங்களாலேயே காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன . காகிதங்கள் எளிதில் மக்குவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை. கணினி, கைப்பேசி போன்ற சாதனங்களை பயன்படுத்தி கற்பதைவிட காகிதத்தை பயன்படுத்தி கற்பது அதிக நாள்கள் நினைவில் இருக்கும்.உலகில் சராசரி மனிதர்களின் காகித பயன்பாடு 60 கிலோவாக இருக்கும் பொழுது, இந்தியர்களின் சராசரி காகித பயன்பாடு 13 கிலோவாக உள்ளது. இதனை அதிகரிக்க செய்தித்தாளையும் புத்தகங்களையும் அதிகம் வாசிக்க தூண்டுவிக்க வேண்டும்.மாணவர்கள் நூலகப் புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் அதிகம் வாசிக்க வேண்டும்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, மாணவ,மாணவிகள் அனைவரும், நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், கோகிலா, தங்க பாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News