உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலி

Published On 2022-07-25 10:13 GMT   |   Update On 2022-07-25 10:13 GMT
  • வாகன விபத்தில் கூலி தொழிலாளி பலியானார்
  • படுகாயம் அடைந்த நண்பருக்கு தீவிர சிகிச்சை

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனதூர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 18), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் உதயகுமார். இவர்கள் 2 பேரும் மதனத்தூரில் இருந்து தா.பழூர் நோக்கி மொபட்டில் சென்றனர். அப்போது அண்ணங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (30) என்பவர் காரைக்குறிச்சியிலிருந்து அண்ணங்காரம்பேட்டைக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். தா.பழூர் செல்லியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மொபட் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன்தாஸ், உதயகுமார் ஆகியோரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்தாஸ் பரிதாபமாக இறந்தார். பின்னர் உதயகுமார் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News