உள்ளூர் செய்திகள்

15 வீடுகளுக்கு 4 வாரத்துக்குள் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-09-07 08:28 GMT   |   Update On 2022-09-07 08:28 GMT
  • குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது.
  • வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை.

அரியலூர் ;

அரியலூர் அடுத்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி (54), வேல்விழி(43), கோவிந்தராஜ்(52), முருகேசன்(53), பாரிவள்ளல்(55), அம்பிகா(48), அருட்செல்வம்(49) உள்ளிட்ட 15 பேர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியில் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களிடமிருந்து ஊராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்புக்கான வைப்புத் தொகையை பெற்றுள்ளது.ஆனால் இதுவரை அவர்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இது குறித்து, அவர்கள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்து செய்துள்ளவர்கள் எவ்வித சேவை கட்டணத்தையும் ஊராட்சி மன்றத்தில் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் நுகர்வோர் அல்ல என்பதால் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற அரசின் வாதம் ஏற்புடையதல்ல.

குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது. வறட்சியின் காரணமாக தனிநபர் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் அவ்வாறு இருக்க ஏன் தனி நபரிடம் வைப்புத் தொகையை பெற்றுள்ளீர்கள் என்பதற்கான பதில் ஊராட்சி மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை .

வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வழங்க வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு, ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை மதிக்காமல் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ள ஊராட்சி மன்ற சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே வழக்கு தொடுத்துள்ள அனைவரது வீடுகளுக்கும் நான்கு வாரத்துக்குள் தேளூர் ஊராட்சி மன்றம் குடிநீர் வழங்க இணைப்பு வழங்க வேண்டும். இதனை அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் வழக்கை தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News