உள்ளூர் செய்திகள்

நல்லதங்காள் கோவிலில் கொள்ளை

Published On 2022-08-21 12:24 IST   |   Update On 2022-08-21 12:24:00 IST
  • நல்லதங்காள் கோவிலில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கலசம், மணி ஆகியவை வயல்காட்டில் கிடந்துள்ளது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள சித்தளி கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக கோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற்று நிறைவடைந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி கோவிலின் கதவுகளை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோவிலின் பின் பகுதியில் மர்ம நபர் ஒருபர் பதுங்கி இருப்பதை சித்தளி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரவி (48) என்பவர் பார்த்து சத்தம் போட்டுள்ளார்,

இதையடுத்து அந்த மர்ம நபர் கோவில் பின்பகுதியில் உள்ள வயல்காட்டு பகுதிக்குக்கு ஓடிவிட்டார். ரவி சந்தேகமடைந்து கோவிலின் தர்மகர்த்தா பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தார். மர்ம நபர் ஒடிய திசையில் சென்று பார்த்தபொழுது கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலசம், மணி ஆகியவை வயல்காட்டில் கிடந்துள்ளது.

பின்னர் கோவில் மண்டப அறையில் அதனை எடுத்து வைத்துள்ளனர். இதையடுத்து தர்மகத்தா பழனிசாமி (59), கோவில் பூசாரி அய்யாசாமி (62) மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது ராஜகோபுர செம்பு கலசம், கருவறை கலசம், மணி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது தெரிந்தது.

இது குறித்து தர்மகர்த்தா அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார். தப்பி ஓடிய மர்ம நபரையும் வலை வீசி போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News