குன்னூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
- சிறுமியை பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர்.
- போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி.
சிறுமியை சம்பவத்தன்று அவரது பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர். இதையடுத்து சிறுமி, தனது பெரியம்மாவுடன், அவரது வீட்டில் இருந்தார்.
சிறுமியின் பெரியம்மா வீட்டின் அருகே சாமிநாதன்(வயது68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி தனது பெரியம்மா வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சாமிநாதன், சிறுமியிடம் நைசாக பேசி, தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சாமிநாதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியான சிறுமி, அவரிடம் இருந்து தப்பி பெரியம்மா வீட்டிற்கு வந்து, நடந்த சம்பவங்களை கூறி அழுதார்.
இதை கேட்டு அதிர்ச்சியான சிறுமியின் பெரியம்மா சம்பவம் குறித்து கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.