விவசாய நிலத்தில் திரிந்த யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு
- அந்த யானை விவசாய நிலத்திலேயே நின்றது. இதைகண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- அந்த யானையை பட்டாசு வெடித்து திம்மசந்திரம் காட்டுக்குள் விரட்டினர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி, ஜவளகிரி, ஊடேதுர்கம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.
இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் திம்மசந்திரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மேகலகவுண்டனூர், கோட்டட்டி கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்தது.
அந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தது. பின்னர் அந்த யானை விவசாய நிலத்திலேயே நின்றது. இதைகண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் பட்டாக வெடித்தும், சத்தம் போட்டும் யானையை விரட்டினர். இதனால் அந்த யானை கோட்டட்டி கிராமத்தில் தார்சாலையில் ஓய்யாரமாக நடந்து சென்றது.
இந்த யானையை வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்று செல்போன்களில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்றனர்.
அவர்கள் அந்த யானையை பட்டாசு வெடித்து திம்மசந்திரம் காட்டுக்குள் விரட்டினர்.